காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக்குழல் வள்ளிபதம் பணியும்
வேளைச் சுரபூபதி மேருவையே.
பொருள் :
கமுகின் பாளை போன்ற கூந்தலை உடைய வள்ளியின் பதம் பணியும் மேரு மலையைப் போன்ற பெருமை வாய்ந்த , ஸ்வர்க லோகத்தின் அதிபதியே! உன்னை என்றும் நிலைத்திருக்கும் சச்சிதானந்த பொருளாக உணர்ந்து உன் பாதங்களை பணியும் பாக்கியத்தை அந்த சீரிய தவத்தை நான் அடைந்தேன், இதுவே ஒரு ஆச்சரியம் தான் !
இந்த பாடலில் காளை குமரேசன் என்ற பதமே மிகவும் முக்கியமானது , இந்த பதத்திற்கு சிவனின் குமாரனாக வந்தவன் என்ற பொருளே பெரும்பாலும் கையாளப்படுகிறது , ஆனால் நாம் இங்கு சற்று முரண்பட்டு சிந்திக்க வேண்டும், முருகனை சிவனின் குமாரன் என்று கருதி தவம் செய்ய முற்படும் ஒருவர் என்ன காரணத்தினால் சிவனை தியானம் செய்யாமல் அவரின் குமாரனை தியானம் செய்ய வேண்டும், இங்கு முருகனோ சிவன் அளிக்காத எந்த ஒரு பொருளையும் தாம் தனியாக அளிக்கப்போவதில்லை, சிவனும் அவ்வாறே. இந்த உருவ வேறுபாடுகளை களைந்த நிலையில் தான் சாதகன் இவ்வளவு நாட்கள் தவமியற்றி இருந்திருக்க வேண்டும் ,ஆகையால் காளை குமரேசன் என்ற பதம் வேறு ஏதோ ஒரு மறை பொருளைத்தான் இங்கு பேச வேண்டும் என்று புலனாகிறது.
காளை என்ற பதம் ஒரு யுவனையோ அல்லது இளைஞனனையோ குறிக்கும் , இங்கு காளை குமரேசன் என்ற பதம் முருகன் நித்திய யௌவனன் என்ற வெளிப்படையான பொருள் கொண்டும் , சூட்சுமமாக முருகன் “சச்சிதானந்த” பெரும் பொருள் என்று கொள்ளும் வகையில் அருளாளர் இந்த பாடலை அமைத்திருக்கிறார். எப்போது ஒருவன் “சச்சிதானந்தம்” என்ற நிலையை அடைகிறானோ அப்போது மட்டுமே அவன் எந்த ஒரு மாற்றங்களும் இல்லாமல் இருக்கிறான் என்று பொருள் , எந்த பொருள் எப்போதும் எந்த மாற்றங்களையும் அடையாதோ, அந்த பொருளுக்கு கால தேச வர்த்தமானங்கள் ஆகிய நிபந்தனைகள் இல்லாமல் போகிறது. முதுமை என்ற ஒன்றே உடலுக்கு காலத்தினால் ஏற்படும் மாற்றமே தான். இதே போல் தான் ஒருவன் வாழ்வில் சந்திக்கும் அத்துணை மாற்றங்களும் காலத்திற்கோ இடத்திற்கோ தகுந்தாற் போல் ஏற்படும் செயல்கள் தான். ஆனால் இறைவன் என்ற பொருள் மட்டுமே எந்த மாற்றத்திற்கும் கட்டுப்படாத ஒரு விஷயமாக இருக்கும்.
ஆதலால் காளை குமரேசன் என்ற பதம் இறைவனின் மாற்றங்களுக்கு உட்படாத சச்சிதானந்த நிலையை மட்டுமே குறிக்கும். அந்த சச்சிதானந்த அனுபவத்தை தமக்கு அளித்த முருக பெருமானின் அபார கருணையை இந்த பாடலில் ஆச்சரியத்துடன் குறிப்பிடுகிறார்.
குருவின் தீக்ஷையும், அதன் பின்னர் அவரின் அருளோடு சேர்ந்த சக்தி பாத் எனப்படும் சக்தியின் பாய்ச்சலுமே சாதகனை இறைவனின் மிக அருகில் இட்டு செல்கிறது , அவ்வாறு அவன் செல்லும் போது தான் இறைவனின் பெருங்கருணையை அவன் சற்று உணர்கிறான், அந்த உணர்ச்சியும் இறைவனின் கருணை தன் மீதும் பாய்ந்த செயலை எண்ணியே வியாபிக்கிறது. சாதகனும் தன் பங்கிற்கு நெடுங்காலம் தவம் செய்த பின்னே தான் அவனுக்கு இறைவனின் கருணையே எப்போதும் தம்மை வழிநடத்திய விஷயம் தெரிகிறது, அதுவே இந்த பாடலில் ஆச்சரியத்திற்கான காரணம்.
இந்த பாடலில் சரணாகதியின் பயனும் வெளிப்படுகிறது, குருவிடம் சரணடைந்து, குரு வாக்கிய படி நடந்த சாதகன் இறைவனை நெருங்குகிறான். சரணாகதியின் பயனே இறைவனை அடைவது தான், அதுவும் எவ்வாறு? இறைவனே இந்த ஜீவாத்மாவை தேடி வந்து , வேண்டியதை கொடுத்து வேண்டாததை கலைகிறான், இந்த தத்துவமே வள்ளியிடம் காதல் நாடகம் நடத்தியதில் அரங்கேறுகிறது, வள்ளிக்கு தன்னை தந்து , பந்த பாசங்களை களைந்து , பயத்தை போக்கி தன்னுடன் சேர்த்து கொள்கிறான் இறைவன் , அதுவும் எவ்வாறு வள்ளியின் பதம் பணிந்து செய்கிறான், இந்த இடத்தில் இறைவன் ஜீவாத்மாவை தேடி வந்து அருள் புரியும் தத்துவமும் விளக்கப்படுகிறது.
அபிராமி அந்தாதியில் பட்டர் “கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த படியே மறையின் பரிமளமே” கூறுகிறார் , இங்கு வம்பே பழுத்த என்ற பதம் சக்தியானவள் தாமாகவே வந்து பட்டரை ஆண்டு கொண்டதைக் குறிக்கும். இங்கு வம்பே என்று சொல்வதற்கு காரணம், தகுதியே இல்லை என்றாலும் தம்மை தேடி வந்து ஆண்டுகொண்ட விதத்தையும், கர்ம வினைகளை தாமே களைந்து ஜீவனை ஆண்டு கொண்டதையும் கூறுகிறார், இதையே தான் முருகனும் “பதம் பணிந்து” என்ற சொற்றொடர் மூலம் செய்கிறான் என்று அருணகிரிநாதர் கூறுகிறார்.
பொதுவாகவே புறச்சமயம் , அகச்சமயம் என்று சைவ சித்தாந்தத்தில் கூறப்படுவதுண்டு. இங்கு புறச்சமயம் என்பது ஒரு தெய்வத்தின் உருவ வழிபாடு, அதைச் சார்ந்த கிரியைகள், சடங்குகள் ஆகியவற்றை கொண்டு, அந்த தெய்வத்தை வழிபட்டு ஆன்மீக வாழ்வில் முன்னேறுகின்ற முறையாகும், இந்த புறச்சமயங்களில் வழிபடும் உருவங்களும், வழிபடு முறைகளும் பல்வேறு மாறுதல்கள் கொண்டு இருக்கும். புறச்சமயத்தில் இருந்து ஒரு சாதகன் முதிர்ந்த பிறகு அகச்சமயத்திற்கு முன்னேறுகிறான், இங்கு அச்சாதகன் கடவுள் ஒருவரே அவரின் வடிவங்கள் பல, வடிவமும் இல்லாதவர், சோதி பிழம்பானவர், அவரைத் தவிர இரண்டாவது இங்கு ஒன்றும் இல்லை என்பதை உணர்கிறான். அகச்சமயம் வந்த ஒருவன், புறத்தில் செய்த பூசைகளும், சடங்குகளும், பல்வேறு சமயங்களும் ஒரே இறைவனைக் குறித்து தான் என்பதை உணர்கிறான். சைவத்தில் இதுவே புறப்பூசை , அகப்பூசை என்று இரண்டு வகையாக இருக்கின்றது. இந்த புறப்பூசையே ஸ்ரீ வித்தையில் பல்வேறு மார்கங்களாக அதாவது தக்ஷிண மார்க்கம் , வாம மார்க்கம் , கௌல மார்க்கம் , மிஸ்ரம் என்று பிரிகிறது , அகச்சமயமோ ஸ்ரீ வித்தையில் சமய மார்க்கம் என்ற பெயருடன் த்யான மார்க்கத்தை மட்டுமே கொண்டு நிற்கும். மற்றய அத்துணை மார்க்கங்களும் இறுதியில் சாதகனை அகத்திலே வழிபடுவதிலேயே கொண்டு நிறுத்தும்.
இந்த பாடலிலும் நாம் இந்த அகத்தில் வழிபடும் விதத்தை காணலாம், இங்கு “காளை குமரேசன் எனக் கருதி” என்ற இடத்தில் “கருதி” என்ற வார்த்தையே மனதால் நிறுத்தி, மனத்தால் வழிபடுவதாக சமய மார்க்கத்தையே தான் காட்டுகிறது, இவ்வாறு மனதால் வழிபட்டால் தான் இறைவன் தாமே வந்து அந்த ஜீவனை ஆட்கொள்கிறார், இந்த செயல் தான் “வள்ளியின் பதம் பணிந்து” என்ற இடத்தில் தெளிவாகிறது.
இங்கு முருகனும் சக்தியும் வேறு வேறல்ல என்பதற்கு சான்று முருகனை மேரு மலையோடு ஒப்பீடு செய்கிறார் அருணகிரிநாதர், இங்கு அவர் மேரு என்று தான் சொன்னாரே தவிர “மலை” அன்று சொல்லவில்லை, இது நாமாக வழக்கத்தில் இருக்கும் பொருள் கொண்டு இந்த அர்த்தம் இருக்கலாம் என்று கொள்கிறோம். ஆனால் மேரு என்ற சொல்லே இங்கு சக்தியின் வெளிப்பாடு , இல்லை என்றால் அது வள்ளியை புகழ்ந்த பின் வரத் தேவையில்லை, மேரு என்பதை ஒரு எந்திரமாக தான் நாம் அறிந்திருக்கிறோம், ஆனால் ஸ்ரீ வித்தையின் ஒட்டுமொத்த வழிபாட்டையும் “பாவனோபநிஷத்” என்ற கிரந்தத்தின் படி , மனாதல் மானுட உடலையே மேருவாக பாவித்து அம்பாளை வழிபடும் வழக்கம் உண்டு, இந்த மாதிரியான வழிபடு முறையிலேயே முருகனை எப்போதும் மனதில் இருத்தி வந்ததால் , வள்ளியைத் தேடி முருகனை வர செய்தது.
லலிதா சஹஸ்ரநாமத்தில் “சமயாச்சார தத்பரா” என்ற நாமம் தியான மார்க்கத்தை வலியுறுத்தும் , அதே போல் “மகா யாக க்ரமாராத்யா” என்ற நாமம் பாவனோபநிஷத் கூறுவது போல் பாவனையால் வழிபடுவதை உணர்த்தும், மேலும் அம்பாள் பக்தனிடம் அவனின் பக்தியால் தான் வருகிறாள் என்று “பக்தி கம்யா” மற்றும் “பக்தி வஷ்யா” என்ற நாமங்கள் உணர்த்தும். தேவி மாகாத்மியத்திலும் “சுரதன்” மற்றும் “வைஷ்யனும்” பராசக்தியை மனதால் வழிபட்டதை உணர்த்தும் ஸ்லோகங்கள் பதின்மூன்றாம் அத்தியாயத்தில் சூக்ஷுமமாக உள்ளது.
இங்கும் சமயங்கள் கௌமாரம் , சாக்தம் என்று பிரிந்தாலும் இங்கு உள்ள இரு தெய்வமும் ஒன்றே என்று கிரந்தங்களே விளக்கி நிற்கிறது.
